சென்னை: சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயம் ஐஸ்லாந்து நாட்டின் ரேக்ஜாவிக் நகரில் நடந்தது.
இதன் 'சேபர்' பிரிவில் தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி பங்கேற்றார். அசத்தலாக ஆடிய அவர் தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 15-13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை வீழ்த்தி தங்கத்தை வென்றார் பவானி தேவி.

உலக அளவில் வாள் வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார். இதற்கு முன்பு அவர் ஆசிய சேட்லைட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த போட்டித்தொடரில் நான் 3வது முறையாக பங்கேற்று தங்கம் வென்றுள்ளேன். கடந்த ஆண்டு, காலிறுதி போட்டியில் தோல்வியடைந்தேன். இதுதான் எனது முதலாவது பதக்கம். உலக அளவிலான ஒரு போட்டித்தொடரில் எனது முதல் பதக்கமும் இதுதான். காலிறுதிக்கு பிறகு போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. பிரிட்டீஷ் வீராங்கனைகள் மிகுந்த சவால் கொடுத்தனர். இருப்பினும் போராடி வெற்றி பெற்றுள்ளேன்" என்றார் பவானி தேவி.