சென்னை: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தின் தொடக்கம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும், கார்ல்சனின் ஆட்டம் டை பிரேக்கருக்கு இட்டுச் செல்லும் என்றும் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் விமர்சித்துள்ளார்.
செஸ் உலகக்கோப்பைத் தொடர் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் 18 வயதான தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான பிரக்ஞானந்தாவை எதிர்த்து விளையாடி வருகிறார். இதன் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். இன்றைய ஆட்டத்திற்கு சில நிமிடங்கள் முன்பாக பிரக்ஞானந்தா வந்து காத்திருக்க, மேக்னஸ் கார்ல்சன் சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய சில நகர்வுகளிலேயே பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இருவரும் தங்களின் குதிரைகளை இழந்தனர். ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேக்னஸ் கார்ல்சன் அடுத்தடுத்து அதிரடியான நகர்வுகளை மேற்கொள்ள, இருவருமே தங்களின் ராணிகளையும் இழந்தனர். இதனால் பிஷப் மற்றும் யானை ஆகிய முக்கிய காய்களுடன் ஆட்டம் தொடர்ந்தது.
தொடர்ந்து 16 நகர்வுகள் முடிவடைந்த பின்னரும் கார்ல்சனால் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. பொறுமையாக விளையாடி வரும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஆட்டத்தின் கட்டுப்பாட்டை கையில் வைத்துள்ளார். இந்த நிலையில் இந்திய செஸ் ஜாம்பவான் இந்த ஆட்டம் குறித்து, இதுபோன்ற ஒரு தொடக்கத்தை எதிர்பார்க்கவில்லை. மேக்னஸ் கார்ல்சன் 2016ஆம் ஆண்டில் விளையாடிய 12வது ஆட்டத்தின் திட்டத்தையே செயல்படுத்துகிறார்.

இதனால் இறுதிப்போட்டியின் 2வது சுற்றும் டிராவில் முடிவடையும் நிலை உருவாகும். ஒருநாள் முழுக்க உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் டை பிரேக்கரை பற்றிய எண்ணத்துடன் இருந்துள்ளார். ஆனால் பிரக்ஞானந்தா, ஆட்டம் தொடங்கிய பின்னரே டை பிரேக்கரை பற்றி சிந்திப்பார் என்று விமர்சித்துள்ளார்.