ஜகார்த்தா: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஹேண்ட்பால் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணிக்கான சீருடைகள் சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. அதனால், சாதாரண உடையணித்து இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வரும் 18ம் தேதி துவக்க உள்ளது. அதே நேரத்தி்ல ஹேண்ட்பால், கால்பந்து போன்ற பிரிவுகளில் முதல் சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன.
இதில் ஆடவர் ஹேண்ட்பாலில் டி பிரிவில் சீன தைபே, பிரிட்டன் மற்றும் ஈரான் அணிகளுடன் இந்தியா உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் சீன தைபே அணியிடம் 28-38 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
ஆடவர் தரவரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் தரவரிசையில் 8வது இடத்தில் தான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அணிகளை அனுப்புவது என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய ஆடவர் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், ஓமன், சீனா, யுஏஇ ஆகியவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகின.
அதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகளில், தரவரிசையில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என ஹேண்ட்பால் சங்கம் கோரியது. நீதிமன்ற தலையீட்டில் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சர்ச்சையால், இந்திய ஹேண்ட்பால் அணி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான நிறுவனத்திடம், இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் 524 வீரர்களுக்கான சீருடைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது.
கடைசி நேரத்தில் தான் ஹேண்ட்பால் அணி சேர்க்கப்பட்டது. அந்த அணிக்கான சீருடைகள் சீன நிறுவனத்திடம் இருந்த இதுவரை வந்து சேரவில்லை. அதனால் சிறப்பு அனுமதி பெற்று, சாதாரண உடையில் இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.