டெல்லி: இந்தியா சார்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான வீரர்-வீராங்கனைகள் இம்முறைதான் ஒலிம்பிக்கிற்கு சென்றனர். 120 பேரை அனுப்பி வைத்தும் ஆண்கள் எல்லோரும் சோடை போய்விட்டனர். மானத்தை காத்தது பெண்கள் மட்டுமே என்ற வசைச் சொல்கள் ஆண் சமுதாயத்தை பஞ்சராக்கிக் கொண்டுள்ளது.
ஆனால் வெற்றி பெற்ற பெண்கள் அனைவர் பின்னாடியும் இருந்து இயக்கிய துரோணாச்சாரியார்கள் ஆண்கள்தான் என்பது இதில் சுவாரசியம்.

நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு 4வது இடத்தை பிடித்தார் தீபா கர்மகர். ஜிம்னாஸ்டிக் போன்ற ஒரு பிரிவில் இந்திய வீராங்கனையின் உச்சகட்ட சாதனை இது.
இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை மல்யுத்தத்தில் வென்று தந்தார் 23 வயதான சாக்ஷி மலிக். பேட்மின்டன் போட்டியில், முதல் முறையாக இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பி.வி.சிந்து.
அடுத்ததாக இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது, கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்கிடமிருந்துதான். இப்படியாக வென்றவர்களும், வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களும் பெண்கள்தானே தவிர, மருந்துக்கு கூட ஒரு ஆணும் இல்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவும் ஏமாற்றவே செய்தார். லியாண்டர் பயஸ், போபண்ணா என எல்லோரும் இந்திய பதக்க கனவை கலைத்தனர். இதனால்தான், ஆண்களால் ஒன்றும் முடியாததை சாதித்து காட்டினர் பெண்கள் என புகழாரம் சூட்டப்படுகிறது.
அதேநேரம், இந்த சாதனை பெண்கள் பின்னால் இருக்கும் குருக்கள் அனைவருமே ஆண்கள்தான் என்பது இதில் சுவாரசியம். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் பயிற்சியாளர் குல்தீப்.
தீபா கர்மாகர் பயிற்சியாளர் பிஸ்பெஸ்வர். அதேபோல சிந்துவின் பயிற்சியாளர், எல்லோருக்கும் தெரிந்த கோபிச்சந்த். இதை எழுத்தாளர் ஷோபா டே இப்படி சொல்கிறார். "ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணுக்கு பின்னாலும், ஒரு ஆண் இருப்பான்".