டெல்லி : இந்திய ஒலிம்பிக் சங்கம் கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில் தன் முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
முன்னதாக ஒலிம்பிக் தொடர் தள்ளி வைக்கப்படும் முன்பு வரை இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் ஆகி வந்தனர். அது பல்வேறு விமர்சனத்தை கிளப்பி வந்தது. பலரும் கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் வீரர்களை பயிற்சி செய்யச் சொல்வது சரியா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர பத்ரா கூறுகையில், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொரோனா வைரஸ் குறித்த பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்த பின் நடத்தப்படும் என கூறி உள்ளார்.
மேலும், "கடந்த சில நாட்களாக இந்திய ஒலிம்பிக் சங்கமும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், மனித குலத்துக்காக தன் கடமையை செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். உங்கள் விளையாட்டு அமைப்புகள் மற்றும் மாநில ஒலிம்பிக் சங்கங்கள் இந்திய அரசு, உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் மற்றும் பிற உலக அமைப்புகள் வெளியிடும் விதிமுறைகள், அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகின்றன" என்றார்.
"இது இந்த உலக நோய்த் தொற்றுக்கு எதிரான போரின் துவக்கம் மட்டும் தான். எதிர்காலத்தில் இது எப்படி செல்லும் என நமக்கு தெரியாது. என்ன புதிய சவால்களை நாம் சந்திக்கப் போகிறோம் என தெரியாது" எனவும் அவர் கூறினார்.
இந்த காலகட்டத்தில் அனைத்து அமைப்புகள் கூறும் விதிமுறைகளை பின்பற்றி வீரர்களுக்கு உதவி செய்வோம் எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் உறுதி அளித்தார்.