ஹாங்சோ: ஆசிய போட்டிகளில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர்பால் சிங் இணை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
19வது ஆசிய போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12வது நாளான இன்று இந்திய அணியின் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ஜோதி, அதிதி மற்றும் பர்னீத் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

அதனை தொடர்ந்து ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் -- ஹரிந்தர்பால் சிங் சந்து இணை மலேசியாவின்ன் அஸ்மான் - முகமது கமல் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய இணை 11-10 மற்றும் 11-10 என்று 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.
இதன் மூலம் ஆசிய போட்டிகள் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் - ஹரிந்தர்பால் சிங் சந்து இணை தங்கம் வென்று அசத்தியுள்ளது. இது ஆசிய போட்டிகளில் இந்தியா வெல்லும் 20வது தங்கமாகும். முதல்முறையாக ஒரே ஆண்டில் ஆசிய போட்டிகளில் இந்தியா 20 தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியா மொத்தமாக 20 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் என்று 83 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இன்னும் 3 நாட்கள் ஆசிய போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் இந்தியா 100 பதக்கங்களை முதல்முறையாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.