ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என்று 15 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்.23ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள், அக்.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இன்று காலை முதல் இந்திய மகளிர் அணி துப்பாக்கிச்சுடுதல் வெள்ளி வென்றது. அதேபோல் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியது.

இந்த நிலையில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12 தங்கம், 16 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று 44ஆக உயர்ந்தது, இதன் பின்னர் குண்டு எறிதல் பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 1500 மீட்ட தடகள போட்டியில் இந்தியாவின் ஹர்மிளன் பைன்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அஜய்குமார் சரோஜ் மற்றும் ஜின்சன் ஜான்சன் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர். தொடர்ந்து 800 மீட்டர் ஹெப்டதலான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி வெண்கலம் வென்றார்.
அதுமட்டுமல்லாமல் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் 8.19 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 50வது பதக்கமாக அமைந்தது. அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சீமா புனியா வெண்கலம் வென்றார். தொடர்ந்து மகளிருக்கான 100 மீட்டர் ஹடில்ஸ் போட்டியில் சீன வீராங்கனை செய்த தவறுக்கு இந்திய வீராங்கனை ஜோதியையும் தகுதிநீக்கம் செய்தது சர்ச்சையாகியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சீனா வீராங்கனை ஓட தொடங்கினார். அவரை தொடர்ந்து இந்திய வீராங்கனை ஜோதியும் ஓடினார். அதில் இந்திய வீராங்கனை ஜோதி எந்த தவறும் செய்யவில்லை. இதனால் உடனடியாக இந்திய நிர்வாகிகள், ஆசிய போட்டிகள் நிர்வாகிகளை சந்தித்து முறையிட்டனர். இதன்பின் யாருக்கும் தண்டனை வழங்கப்படாமல் அனைவரும் 100 மீட்டர் ஹடில்ஸ் போட்டியில் ஓடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பதக்கம் வென்றால், அதனை நிர்வாகிகள் முடிவிற்கு பின்னரே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் நடைபெற்ற மகளிருக்கான ஹடில்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி 3வது இடம் வந்தார். ஆனால் சீன வீராங்கனை வூ தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால், ஜோதிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் நடந்த பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. இறுதியாக இன்றைய நாளின் முடிவில் இந்தியா மொத்தமாக 13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என்று 53 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.