டெல்லி: ஈரானில் நடந்த ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
அணிகளுக்கு இடையேயான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரானில் ஜூலை 26 முதல் நடந்து வருகிறது.

இதில் இந்திய பெண்கள் குழு மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
பிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 2014க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்கிறது.
இதைத் தவிர ராபிட் பிரிவில் வெள்ளி மற்றும் கிளாசிகல் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய வீராங்கனை டி. ஹரிகா, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் தலையை மறைக்கும் வகையில் துணியை அணிய வேண்டும் என்று ஈரான் அரசு கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து, இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என இந்திய மகளிர் கிராண்ட் மாஸ்டர் சவுமியா சுவாமிநாதன் போட்டியில் இருந்து விலகினார்.