ஹாங்சோ: ஆசிய போட்டிகள் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் தஜிந்தர்பால் சிங் கடைசி வாய்ப்பில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்.23ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள், அக்.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இன்று காலை முதல் இந்திய மகளிர் அணி துப்பாக்கிச்சுடுதல் வெள்ளி வென்றது. அதேபோல் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியது.

இந்த நிலையில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12 தங்கம், 16 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று 44ஆக உயர்ந்தது, இதன் பின்னர் குண்டு எறிதல் பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பாக 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் கலந்துகொண்டார். இதில் 28 வயதாகும் தஜிந்தர்பால் சிங் தனது 4வது வாய்ப்பில் 20.06 மீட்டர் தூரம் வீசினார். இதனையடுத்து சவுதி அரேபியாவின் டோலோ 20.18 மீட்டர் தூரம் வீசினார்.
இதன்பின்னர் கடைசி வாய்ப்பில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.36 மீட்டர் தூரன் குண்டை எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குண்டு எறிதலில் தங்கம் வென்ற 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக பர்துமான் சிங் பரார், ஜோகிந்தர் சிங் மற்றும் பகதூர் சிங் சவுகான் ஆகியோர் குண்டு எறிதலில் தொடர்ச்சியாக 2 முறை தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.