லண்டன்: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் 2 பதக்கங்களை வென்றதற்காக இந்தியர்கள் கொண்டாடுவது வெட்கப்பட வேண்டியது என இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் வாய்த் துடுக்காக கருத்து தெரிவித்துள்ளார்.
ரியோடிஜெனீரோ நகரில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும் இதுவே நமக்கு சாதனைதான். எனவே இதை இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்து மற்றும் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு பரிசுகள் குவிகின்றன. ஆனால் இது பலரது கண்களுக்கு காமாலையைக் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ரொம்பவே புலம்பி வாங்கிக் கட்டிக் கொண்டார். தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்ஸ்கன் வாயை விட்டு வாங்கிக் கட்டி வருகிறார்.
பியர்ஸ் மார்கன் இந்தியர்கள் இரண்டு பதக்கங்கள் வென்றதை கொண்டாடுவதை கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
1.2 பில்லியன் மக்கள் உள்ள நாடு 2 பதக்கங்களை போய் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது என்று கேட்டுள்ளார்.
மார்கனை பொறுத்தவரை விளையாட்டு என்றால் வெற்றி மட்டும் தானாம். இரண்டு பதக்கம் வாங்கியதை பாராட்ட மனம் இல்லாத மார்கன் விமர்சனம் செய்ய மட்டும் ஊருக்கு முந்திக் கொண்டு வந்துவிட்டார். அவரது ட்வீட்டை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.