ஹாங்சோ: ஆசிய போட்டிகள் மகளிர் கபடி பிரிவின் இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஆசிய போட்டிகளில் முதல் முறையாக 100வது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய போட்டிகள் 14வது நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்றைய நாளின் முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என்று மொத்தமாக 95 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.

மகளிருக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி வெண்கலம் வென்று அசத்தினர். தொடர்ந்து வில்வித்தை காம்பவுண்ட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி வென்னம் தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து வில்வித்தையில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றது.
அதில் இந்தியாவின் ஓஜாஸ் தங்கப் பதக்கத்தையும், அபிஷேக் வர்மா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 99ஐ எட்டியது. இதனைத்தொடர்ந்து மகளிர் கபடி பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இதன் முதல் பாதி முடிவில் 14-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன்பின் இரண்டாவது பாதியின் கடைசி சீன தைபே பதிலடி கொடுத்து முன்னேற, இந்தியா கடைசி 5 நிமிடங்களிள் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்திய வீராங்கனைகளின் அபாரமான ரெய்டால் 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியா ஆசிய போட்டிகளில் 25வது தங்கத்தை வென்று அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிய போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 70 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.