ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு திருடப்பட்டுவிட்டது என்று பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் தெரிவித்தார்.
உலக கோப்பை காலிறுதி போட்டியில் கொலம்பியா அணியுடன் பிரேசில் மோதிய போட்டியின்போது, கொலம்பிய அணியின் வீரர் தடுப்பு ஆட்டக்காரர் ஜுவான் ஜுனிகா, பிரேசிலின் நெய்மரை தள்ளிவிட்டதன் காரணமாக கீழே விழுந்த நெய்மருக்கு முதுகில் பலத்த அடி பட்டது.
இதனால் அவர் உலக கோப்பை போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அரையிறுதிக்கு பிரேசில் தகுதி பெற்றுள்ள நிலையில், அரை இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தினால், இறுதி போட்டிக்கு பிரேசில் தகுதி பெறும். எப்படிப்பார்த்தாலும், இன்னும் இரு போட்டிகள்தான் பிரேசிலுக்கு எஞ்சியுள்ள நிலையில், நெய்மார் முக்கியமான கட்டத்தில் அணியில் இல்லாதது பிரேசில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்ற எனது கனவை அவர்கள் (கொலம்பிய அணியினர்) திருடிவிட்டனர். அதே நேரம் பிரேசில் உலக கோப்பையை மீண்டும் தூக்கும் என்ற எனது கனவு இன்னும் கலையவில்லை. இன்னும் இரு போட்டிகள்தான் பிரேசிலுக்கு எஞ்சியுள்ளன. எனது அணியின் சக வீரர்கள் தங்கள் திறமையை காண்பித்து கோப்பையை வெல்லச் செய்வார்கள்" என்று நெய்மார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். திருடிவிட்டனர் என்று நெய்மர் கூறியிருப்பன் மூலம், வேண்டுமென்றே தன்னை கொலம்பிய வீரர் தள்ளிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நெய்மர் காயத்துக்கு காரணமான கொலம்பியாவின், ஜுவான் ஜுனிகா மீது கடும் நடவடிக்கை எடுக்க ஃபிஃபா ஆலோசித்து வருகிறது. இதையறிந்த ஜுவான் ஜுனிகா, நெய்மருக்கு ஒரு கடிதம் எழுதி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.