டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (BFI) நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக, அதை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், நமது நாட்டின் குத்துச்சண்டை விளையாட்டு சார்ந்த நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐந்து பேர் கொண்ட தற்காலிகக் குழுவை நியமித்துள்ளது.
"இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு நிர்வாகிகளின் தேர்தல் பிப்ரவரி 2, 2025 அல்லது அதற்கு முன் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு தாண்டியும் தேர்தல் நடத்தப்படவில்லை, இதன் விளைவாக கூட்டமைப்பில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது," என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சர்வதேச அளவில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்கும் ஐந்து பேர் கொண்ட தற்காலிக குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
ஜார்க்கண்டின் மதுகாந்த் பதக் இந்த தற்காலிகக் குழுவின் தலைவராகவும், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் பண்டாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தராகண்டின் டி.பி. பட், அஸ்ஸாமைச் சேர்ந்த சிவா தாபா மற்றும் வீரேந்திர சிங் தாக்கூர் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல் நவம்பர் 2024 இல் நடைபெறவிருந்தன. ஆனால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அறிவுறுத்தல் புறக்கணிக்கப்பட்டது. பின்னர் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு நிர்வாகிகளின் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. எனினும், பிப்ரவரி 2-க்குள் நடத்த வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறி இருந்தது. அதுவும் நடக்கவில்லை.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தனது வருடாந்திர உள்நாட்டு குத்துச்சண்டை போட்டித் தொடர்களை சரியான நேரத்தில் நடத்தத் தவறிவிட்டது. கடந்த மூன்று மாதங்களில் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டன. தற்போது நியமிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக குழு இதுவரை நடத்தப்படாமல் இருக்கும் உள்நாட்டு குத்துச்சண்டை போட்டிகளை விரைவில் நடத்த திட்டமிட்டு உள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம், தற்காலிகக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், கூடிய விரைவில் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. "தற்காலிகக் குழு, வழிகாட்டுதல்களின்படி இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு நிர்வாகிகளின் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிட ஒரு தேர்தல் அதிகாரியையும், ஒரு சுயாதீன பார்வையாளரையும் நியமிக்க வேண்டும்," என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.