தள்ளிப் போன டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.. கையைக் கடிக்கப் போகும் பட்ஜெட்.. கவலையில் ஐஓசி
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போயிருப்பதால் பட்ஜெட் தொகை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
Recommended Video
இந்த கூடுதல் செலவுத் தொகையை எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையில் தற்போது சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இறங்கியுள்ளது. கொரோனாவைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
வேறு வழி இல்லாத காரணத்தால் இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எடுத்தது. இந்த நிலையில் தற்போது புதுக் கவலையில் சர்வதேச ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மூழ்கியுள்ளனர். அதுதான் தள்ளிவைப்பால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவீனம்.

முதல் முறையாக தள்ளிவைப்பு
ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை ஒரு போதும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதில்லை. சில முறை ரத்து செய்யப்பட்டுள்ளனவே தவிர ஒத்திவைப்பு என்பது இதுதான் முதல் முறையாகும். இந்த நிலையில் தற்போது போட்டிகளை ஒத்திவைத்திருப்பதால் கூடுதல் செலவீனம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே போட்டியை நடத்தியிருந்தால் அதற்கான பட்ஜெட் 12.6 பில்லியன்தான் வந்திருக்கும். ஆனால் தற்போது அதை விட பல மடங்கு கூடுதல் செலவு ஏற்படப் போகிறது.

காத்திருக்கும் கூடுதல் செலவுகள்
எல்லா பிரிவிலும் செலவுகள் கூடுதலாகவுள்ளன. அதாவது ஒலிம்பிக் கிராமம், ஹோட்டல்கள், டிக்கெட், இடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திலும் கூடுதல் செலவுகள் காத்துள்ளன. இதுதொடர்பாக ஒலிம்பிக் கிராம செயல் இயக்குநர் கிறிஸ்டோப் துபி கூறுகையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், டோக்கியோ போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கும் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதுதான் பெரும் சிக்கல் என்றுள்ளார்.

தீவிர ஆலோசனையில் ஐஓசி
இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். பட்ஜெட் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் தீவிர ஆலோசனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மார்க்கட்டிங், டிக்கெட், விருந்தோம்பல் என பல வழிகளிலும் டோக்கியோ ஏற்பாட்டுக் கமிட்டி மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளது. ஆரம்பத்தில் வருமானம் குறித்து கவலைப்பட்டோம். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக் குழு அதை திறம்பட சமாளித்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டைம் இருக்கு சமாளிப்போம்
தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செலவு தொடர்பான கவலையையும் நாங்கள் திறமையாக சமாளித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக அனைவரும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். நமக்கு நாட்கள் உள்ளன. எனவே அதற்குள் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications