டோக்கியோ ஒலிம்பிக் 2020
வரும் வாரத்தில் துவங்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இருவரும் இணைந்து இந்த முடிவை அறிவித்தனர்.
ஒலிம்பிக் கமிட்டிக்கு வேண்டாம்
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தற்போது முதலே திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் தெரிவித்திருந்தார். இதனிடையே வீடியோ கால் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரசிகர்கள் அற்ற ஒலிம்பிக் போட்டிகள் தங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கண்டிப்பாக வேண்டும்
அடுத்த ஆண்டு மீண்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளநிலையில் இதுகுறித்து பலதரப்புகளில் பல்வேறு திட்டங்களை தாங்கள் யோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்ற தொடர்களில் தற்போது நடைபெறுவது போல, ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகளை நடத்தும் திட்டமில்லை என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உற்சாகத்தை கொண்டுவர வேண்டும்
அடுத்த ஆண்டிற்குள் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிய வாய்ப்பில்லை என்று கூறியுள்ள பாச், ஒலிம்பிக் போட்டிகளில் அனைவரது பாதுகாப்பையும் உறுதி படுத்தவும் ஒலிம்பிக் போட்டிகளின் உற்சாகத்தை கொண்டுவரவும் திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டோக்கியோவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. அது ரெட் அலர்ட் சோனிற்கு சென்றுள்ளது.