
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தொடர் தற்போது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஒவ்வொரு அணியும் தனித் தனியாக தயாராகி செல்ல உள்ளன. அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிளம்பும் முன் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சில அணிகள் மூன்று முறை பரிசோதனை செய்து கொள்ள உள்ளன.

ஆறு நாள் பயிற்சி முகாம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் ஒன்று கூடி பின் அங்கே இருந்து ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளனர். அதற்கு முன்னதாக ஆறு நாள் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டு வருகின்றனர். அனைத்து சிஎஸ்கே வீரர்களும் சென்னை வரும் முன் ஒரு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர்.

தோனிக்கு பாதிப்பு இல்லை
தோனியும் ராஞ்சியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என முடிவு வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் சென்னை வந்து பயிற்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

இரண்டாம் கட்ட பரிசோதனை
இந்த நிலையில், சிஎஸ்கே முகாமில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தோனி உட்பட அனைத்து சிஎஸ்கே வீரர்களின் முடிவுகளிலும் பாதிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது.

ஹர்பஜன் சிங் வரமாட்டார்
ஹர்பஜன் சிங் தவிர இந்தியாவில் உள்ள சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். ஹர்பஜன் சிங் இரண்டு வாரம் கழித்து சிஎஸ்கே அணியுடன் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











