மும்பை : 40 நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தொடருக்கு தயாராகிவிட்டன.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 5வது சீசன் நடந்துவருகிறது. ஐ.எஸ்.எல் தொடருக்கு இடையே ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியதால் ஐ.எஸ்.எல் தொடரில் இடைவெளி விடப்பட்டது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுத்திக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. இந்நிலையில், வரும் 25ம் தேதி முதல் மீண்டும் ஐ.எஸ்.எல் தொடர் நடக்க உள்ளது.

குளிர்கால இடைவெளி முடிந்து தொடங்கும் முதல் போட்டி கொச்சியில் நடக்கிறது. வரும் 25ம் தேதி(வெள்ளிக்கிழமை) கொச்சி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஏடிகே(கொல்கத்தா) அணியும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.
தற்போதைய சூழலில் பெங்களூரு எஃப்சி அணி தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய 3 இடங்களை பிடித்து தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், கோவா, ஏடிகே மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 5 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ள இந்த 5 அணிகளில் ஏடிகே, நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகளும் தலா 2 வீரர்களை புதிதாக வாங்கியுள்ளது.
குளிர்கால இடைவெளிக்கு முன்னதாக கோவா அணி ஆடிய கடைசி 4 போட்டிகளில் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த அணியில் உள்ள குறைகளை களைந்து இனிவரும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் நோக்கில், மொராக்கோ வீரர் சையத் குரோச் மற்றும் கோல் கீப்பர் நவீன் குமார் ஆகிய இருவரையும் வாங்கியுள்ளது.
புதிய வீரர்களின் வருகை குறித்து கருத்து தெரிவித்த கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லொபேரா, நவீன் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு அணியின் ஆட்ட உத்தியை கோல் கீப்பர் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் எங்கள் அணியின் ஆட்ட உத்தியை நன்கு அறிந்த நவீன் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.
சையத் குரோச், லொபேராவின் பயிற்சியில் மொராக்கோ வீரர் ஹுகோ பொமோஸ் மற்றும் ஃபிரென்ச் வீரர் அஹமது ஜஹோ ஆகியோருடன் ஆடியவர். எனவே ஃபெரான் கொரோமினஸ் மற்றும் எடு பேடியா ஆகிய இருவரும் சேர்ந்து ஆடமுடியாத பட்சத்தில் அந்த இடத்தை சையத் குரோச்சை வைத்து நிரப்ப ஏதுவாக இருக்கும்.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, ஆக்ரோஷத்துடன் ஆடி இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் கடைசியாக ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லாமல் தொடர் தோல்வியை தழுவியுள்ளது. அதிலும் கோவா அணிக்கு எதிராக 4-1 என்ற கோல்கணக்கில் மரண அடி வாங்கியது. இந்நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த அணி ஷௌவிக் கோஷ் மற்றும் பனாஜியோடிஸ் டிரையாடிஸ் ஆகிய இருவரையும் வாங்கியுள்ளது. இவர்கள் இருவரின் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும்.
ஏடிகே அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை விட 4 புள்ளிகள் குறைவாகப் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி கோல் அடிக்க முடியாமல் திணறிவரும் ஏடிகே அணி, இந்த சீசனில் குறைந்த கோல்கள் அடித்த அணியாக உள்ளது. ஏடிகே அணி தடுப்பாட்டம் ஆடுகிறதே தவிர, ஆதிக்கம் செலுத்தி கோல் அடிக்க திணறுகிறது. எனவே அதிரடியாக ஆடும் 2 வீரர்களை அணியில் எடுத்துள்ளது.
கடந்த சீசனில் பெங்களூரு எஃப்சி அணிக்காக அபாரமாக ஆடிய எடு கார்சியாவை ஏடிகே அணி எடுத்துள்ளது. மேலும் டெல்லி டைனமோஸ் அணியில் ஆடிய ப்ரிதம் கோட்டலும் ஏடிகே அணியில் இணைகிறார். இவர்கள் இருவரும் அணியில் இணைந்துள்ளதால், இனிவரும் போட்டிகளில் தடுப்பாட்டத்திலிருந்து மீண்டு எதிரணிகளை எதிர்த்து அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
2 வீரர்களை புதிதாக அணியில் பெற்றிருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பல், புதிய வீரர்களின் வருகை எங்கள் அணிக்கு கூடுதல் பலம். அவர்களின் வருகை அணியின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம். 2019ம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம் என கோப்பல் தெரிவித்தார்.
மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி ஆகிய இரு அணிகளும் எந்த புதிய வீரர்களையும் அணியில் எடுக்கவில்லை. மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், ஏடிகே, கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 5 அணிகளில் எந்த 3 அணிகள் தகுதிச்சுற்றுக்குள் நுழைகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
(Photos Courtesy - ISL)