விஸ்வநாதன் ஆனந்த்தை சந்தித்த அந்த தருணம்.. இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அனுபவம்!
சென்னை : சென்னையை சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தான் விஸ்வநாதன் ஆனந்த் போலவே ஆக ஆசைப்பட்டதாக கூறி உள்ளார்.
அதே சென்னையை சேர்ந்த செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். இந்தியாவில் செஸ் குறித்த விழிப்புணர்வை பெரிதாக ஏற்படுத்தியது இவருடைய வெற்றிகள் தான்.
அவரைப் பற்றி பிரக்ஞானந்தா மைன்ட் மாஸ்டர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ஆனந்தின் பெரிய ரசிகன். நான் செஸ் விளையாடத் துவங்கியது முதல் அவர் தான் எனக்கு ஊக்கமாக இருந்தார்" என்றார்.

"2012இல் அவர் உலக சாம்பியன்ஷிப் வென்ற உடன் எங்கள் பள்ளி சார்பாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரைப் போலவே ஆக வேண்டும் என எனக்குத் தெரிந்தது அந்த தருணம் தான். அதன் பின் ஒரு மாதம் கழித்து நான் ஆசிய யூத் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று பட்டம் வென்றேன். சென்னையில் இருந்து 5 பேர் அதில் வெற்றி பெற்றோம். அவரை மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்தது" என்றார் பிரக்ஞானந்தா.
"டாடா ஸ்டீல் செஸ் தொடரில் அவருக்கு எதிராக ஆட வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்." என்றார் பிரக்ஞானந்தா.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மைன்ட் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சிறு வயது செஸ் அனுபவங்களை அப்போது பகிர்ந்து கொண்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications