ஓரிகான் : கார் ரேஸ்-இல் வேகமான பெண்மணியாக அறியப்படும் ஜெஸ்ஸி கோம்ப்ஸ், தன் கார் ரேஸ் சாதனையை முறியடிக்க ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரை இழந்தார்.
ஜெஸ்ஸி கோம்ப்ஸ் 39 வயதாகும் கார் ரேஸ் வீராங்கனை ஆவார். அதிக வேகத்தில் கார் ஓட்டிய பெண் பந்தய ஓட்டுனர் என்ற பெருமை இவருக்கே உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு 641 கிலோ மீட்டர் வேகத்தில் கார் (நான்கு சக்கரம்) ஓட்டி வேகமான கார் ரேஸ் பெண்மணி என்ற சாதனை செய்தார். அந்த சாதனையை தானே முறியடிக்க ஆசைப்பட்டு பல முறை முயற்சி செய்துள்ளார்.
அப்படி ஒரு முயற்சியின் போது, அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் ஆல்வார்ட் டெசர்ட் பகுதியில் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அவர் சாதனை செய்யும் முயற்சியில் தான் உயிர் இழந்தார் என்றாலும், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் கூட ஜெஸ்ஸி கோம்ப்ஸ் தன் சாதனையை முறியடிக்க சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். இதில் ஒரு ஆச்சரிய தகவலும் கூறப்படுகிறது.
ஜெஸ்ஸி கோம்ப்ஸ் தன் சாதனையை முறியடித்து 777 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு முறை காரை செலுத்தி இருக்கிறார். ஆனால், அப்போது சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அதை சாதனையாக அறிவிக்க முடியாமல் போனது என்கிறார்கள்.
அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் ஒரு முயற்சி எடுத்துள்ளார் ஜெஸ்ஸி கோம்ப்ஸ். அப்போது தான் கோர விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
மூன்று சக்கர கார் ரேஸ் வீராங்கனை கிட்டி ஓ நெயில் தான் ஒட்டுமொத்த கார் ரேஸ் உலகில் அதிக வேகத்தில் கார் ஓட்டியவர். அவர் 1976இல் 824 கிலோ மீட்டார் வேகத்தில் ஓட்டி சாதனை செய்துள்ளார். அதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கமும் ஜெஸ்ஸி கோம்ப்ஸ்-க்கு இருந்துள்ளது. ஆனால், அந்த ஆசை விபரீதமாக முடிந்துள்ளது.