ராஞ்சி: அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிருக்கான யு17 சுப்ரடோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய லலிதா என்ற 10ஆம் வகுப்பு மாணவிக்கு ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. அந்த பரிசைப் பெற்ற மாணவி லலிதா, இந்த பணம் எனது குடும்பத்திற்கு பயன்படும் என்று தெரிவித்திருந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ருத்ரபூர் கிராமத்தில் பிறந்தவர் லலிதா.
சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் இவரின் குடும்பத்தினருக்கு, பொருளாதார ரீதியாக எண்ணற்ற பிரச்சனைகள். இந்த பொருளாதார பிரச்சனையால் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் சாதித்த லலிதாவின் அக்கா ஆர்த்தி, வில்வித்தைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்க வசதியில்லாததால் மொத்தமாக விளையாட்டையே கைவிட்டவர்.

இதுவே லலிதாவை கால்பந்து பக்கம் கவனத்தை வைக்க காரணமாக அமைந்தது. ருத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் கால்பந்து விளையாடியதை பார்த்து, கால்பந்து மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சிறிய வயதிலேயே கால்பந்து விளையாட்டை சிறப்பாக விளையாட தொடங்கிய நிலையில், 3ஆம் வகுப்பு படிக்கும் போதே பள்ளி விடுதியில் தங்க தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் பயிற்சி, படிப்பு, பயிற்சி, தூக்கம் என்றே நாட்கள் கடந்திருக்கிறது. இதன் காரணமாக லலிதாவின் கால்பந்து திறமையும் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. குடும்பத்தினரை சந்திக்க லலிதா அதிகளவு சென்றதில்லை. ஏனென்றால் லலிதாவின் குடும்பத்தினர் ஒருநாளில் 2 வேளை சாப்பாட்டிற்கே அதிகபடியான உழைப்பை கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய மகளிர் லீக் 2வது டிவிஷன் தொடரில் ஒடிசா கிளப்பிற்காக விளையாட லலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த பணம், லலிதாவின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பொருளாதார உதவியாக அமைந்துள்ளது. லலிதா விளையாட்டு மூலமாக பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், கிராமத்தினர் மத்தியில் மரியாதையும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே இந்திய கால்பந்து அணிக்காக யு15, யு17 போட்டிகளில் லலிதா விளையாடியிருக்கிறார். தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது நடந்த சுப்ரடோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வங்கதேசத்தைச் சேர்ந்த கிரீரா சிக்கா ப்ரோடிஸ்தான் அணியை 4-1 என்ற கணக்கில் மதர்ஸ் சர்வதேச பள்ளி அணி வீழ்த்தி அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு ராஞ்சியில் உள்ள மதர்ஸ் சர்வதேசப் பள்ளியின் வெற்றிக்கு லலிதாவின் ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 10ஆம் வகுப்பு படிக்கும் அவர், இப்போதே சர்வதேச அளவிலான போட்டியில் விளையாடி வருகிறார். இதனால் வருங்காலத்தில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடுவார் என்று நம்பிக்கை அதிகரித்துள்ளது.