ராஞ்சி: "வெளிநாட்டில் இந்தியக் கொடியை ஏந்துவது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் அந்தப் பெருமை எனக்கு இன்னும் ஒரு வேலையைப் பெற்றுத் தரவில்லை" என சீனாவில் நடைபெற்ற உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் வுஷு பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி வீராங்கனை பூர்ணிமா லிண்டாவின் வேதனை மிகுந்த வார்த்தைகள்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள கான்கே கிராமத்தைச் சேர்ந்த 'ஓரான்' பழங்குடியினப் பெண்ணான பூர்ணிமா லிண்டா, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெறும் உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றபோது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அந்தப் போட்டிக்குச் செல்ல தன்னிடம் போதிய பணம் இல்லை என்பதை உணர்ந்தபோது அவர் சோகத்தில் ஆழ்ந்தார்.

நிலையான வருமானம் இல்லாத நிலையில், 30 வயதான பூர்ணிமா தனது குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் சக வுஷு விளையாட்டு வீரர்களிடம் உதவி கோரினார். அனைவரின் கூட்டு முயற்சியால், ரூ. 1.5 லட்சம் நிதி திரட்டப்பட்டது. அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்ணிமா வீணாக்கவில்லை.
அக்டோபர் 14 முதல் 20 வரை சீனாவின் எமிஷான் நகரில் நடைபெற்ற போட்டியில், வாள்வீச்சு (நந்தாவோ) மற்றும் ஆயுதங்கள் இல்லாத தற்காப்புப் கலை (Bare-Handed Routines) ஆகிய இரண்டு பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
சுமார் 54 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து சென்ற 20 வீரர்களில் பூர்ணிமாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் ஈடுபட்டு வரும் பூர்ணிமா, சர்வதேச அளவில் பதக்கம் வெல்வது இது முதல் முறையல்ல.
ஒரு அங்கன்வாடி ஊழியர் மற்றும் தினக்கூலித் தொழிலாளியின் மகளான பூர்ணிமா, தனது கிராமத்தில் உள்ள மிஷனரி பள்ளியில் முதன்முதலில் வுஷு கலையைக் கற்றுக்கொண்டார். கன்னியாஸ்திரீகளின் ஊக்கத்தால், குங்ஃபூவின் ஒரு பிரிவான 'சாண்டா'வில் (நேரடி மோதல்) பயிற்சி பெற்றார். நான்காம் வகுப்பு படிக்கும்போதே சண்டிகரில் தனது முதல் தேசிய பட்டத்தை வென்று, ரூ.10,000 பரிசுத் தொகையையும் பெற்றார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட தேசிய பட்டங்களை வென்றுள்ளார்.
தனது உணவுமுறை குறித்துக் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே, "புரதம், ஊட்டச்சத்துக்கள் போன்ற வார்த்தைகள் எங்கள் அகராதியில் இல்லை. கிராமப்புற வாழ்க்கை முறையில் கிடைத்த மனவலிமையாலும், உடல் வலிமையாலுமே நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" என்கிறார்.
சொந்த ஊர் திரும்பிய பூர்ணிமாவுக்கு அவரது கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. "அரசாங்கத்திடமிருந்து யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை" என்று பூர்ணிமா கூறுகிறார்.
சீனாவில் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் மரியாதையையும், வசதிகளையும் கண்டு வியந்ததாகக் கூறும் பூர்ணிமா, "அங்கு ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார். அவர்கள் காட்டிய நேர்மையும், மரியாதையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது" என்றார்.
தற்போது, தனது தாயார் அங்கன்வாடி ஊழியராகப் பெறும் ரூ. 4,000 வருமானத்திலும், உடல்நலம் குன்றிவரும் தந்தையின் நிலையிலும் குடும்பம் இயங்கி வருகிறது. பூர்ணிமாவின் ஒரே இலக்கு, ஒரு அரசு வேலையைப் பெறுவது மட்டுமே. ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
"வெளிநாட்டில் இந்தியக் கொடியை ஏந்துவது மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் அது எனக்கு இன்னும் ஒரு வேலையைப் பெற்றுத் தரவில்லை" என்ற அவரது வார்த்தைகள், திறமையிருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் பல விளையாட்டு வீரர்களின் நிலையை எடுத்துரைக்கிறது.