இந்தியாவின் இளம் மலை ஏற்ற வீராங்கனை காம்யா கார்த்திகேயன், குளிர்கால விளையாட்டிலும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விண்டர் கேம்ஸில் ஸ்கி மவுண்டினியரிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, தனது சாதனைகளில் புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளார்.
உலகின் ஏழு சிகரங்களை இளம் வயதிலேயே கடந்து காம்யா ஏற்கெனவே உலகப் புகழ் பெற்றவர். மலையேற்றத்திலிருந்து ஸ்கி விளையாட்டுக்கு வெற்றிகரமாக மாறி, தனது திறனை மீண்டும் நிரூபித்துள்ளார். மைக்கேல் தளத்திடம் அளித்த பேட்டியில், காம்யா "மலைகள் என் வாழ்க்கையின் முக்கியமான பகுதி. ஸ்கி மவுண்டினியரிங்கிற்கு மாறுவது சவாலாக இருந்தாலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு என் எல்லைகளை சோதிப்பது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு காரணமாக கடந்த முறை போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் தெரிவித்தார்.தனது சிறுவயதிலேயே டிரெக்கிங் மூலம் மலையேற்ற ஆர்வம் கொண்ட காம்யா, அதையே இலக்காக்கினார். தொடர்ச்சியான பயிற்சியும் உறுதியும் கொண்டு உலகின் உயரமான சிகரங்களை அடைந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

மலையேற்ற அனுபவம், கடுமையான காலநிலை மற்றும் உடல்,மன அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவை ஸ்கி மவுண்டினியரிங் போட்டிகளில் பெரும் உதவியாக இருந்ததாக காம்யா தெரிவித்தார். "மலைப்பகுதிகளில் மனவலிமை மிகவும் முக்கியம். ஏன் இந்த பயணத்தை தொடங்கினேன் என்பதை நினைத்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பேன்," என அவர் வலியுறுத்தினார்.
காம்யா விளையாட்டில் சாதனை புரிவதுடன் பொறியியல் படிப்பையும் தொடர்கிறார். கடுமையான பயிற்சியும் கல்வியும் ஒரே நேரத்தில் சமாளிக்க, திட்டமிடல், ஒழுக்கம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் ஆதரவே இந்த பயணத்திற்கு முக்கிய காரணம் என்றார் காம்யா. சர்வதேச ஸ்கி மவுண்டினியரிங் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்பதே தனது அடுத்த இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய காம்யா "அதிகமான இளைஞர்கள் வெளிப்புற சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் ஆர்வத்தை பின்பற்றுங்கள். சவால்களை பயப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்."மலை ஏற்றம், குளிர்கால விளையாட்டுகள் இரண்டிலும் சாதித்து வரும் காம்யா கார்த்திகேயன், இந்தியாவின் எதிர்கால சாகச விளையாட்டு நட்சத்திரமாக மிளிர்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த தந்தையும், கேரளத்தைச் சேர்ந்த தாயும் கொண்ட இவர், தற்போது மகாராஷ்டிராவில் வசித்து வருகிறார்.