சென்னை: சென்னையில் இன்று நடந்த 8வது மராத்தான் ஓட்டப் போட்டியில் கென்ய வீரர் அகஸ்டின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மராத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இன்று 8வது மராத்தான் ஓட்டம் நடந்தது.
முதலில் ஆண்களுக்கான முழு மராத்தான் ஓட்டம் (42.2 கிலோ மீட்டர்) நடந்தது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் தொடங்கி, காந்தி சிலை, பட்டினப்பாக்கம், மலர் மருத்துவமனை, பெசன்ட் நகர் ஐ.ஓ.பி., பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் வரை சென்று மீண்டும் அதே பாதை வழியாக போட்டி தொடங்கிய இடத்துக்கு வந்தடைந்தது.
அதை தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கான அரை மராத்தான் (21.1 கிலோ மீட்டர்), ஆண்கள், பெண்களுக்கான மினி மராத்தான் (10 கிலோ மீட்டர்), பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மராத்தான் (5 கிலோ மீட்டர்), நிறுவனங்களின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டம் (5 கிலோ மீட்டர்) ஆகியவை நடந்தது.
9 பிரிவுகளில் நடந்த மராத்தான் பந்தயத்தில் 17 ஆயிரம் பேர் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மேயர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
முழு மராத்தான் ஓட்டத்தில் கென்ய வீரர் அகஸ்டின் முதலிடத்தைப் பிடித்தார். இந்திய வீரர் சந்தோஷ் குமார் 2-வது இடத்தையும், கென்ய வீரர் மோசஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான அரை மராத்தான் பிரிவில் சுதாசிங் (உ.பி)முதலிடத்தையும், கென்யாவைச் சேர்ந்த மித்ரேத் சேபாசிக் 2-வது இடத்தையும், தமிழக வீராங்கனை லட்சுமி 3-வது இடத்தையும் பிடித்தனர்.