கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (SAI) விடுதியில் இரண்டு இளம் விளையாட்டுப் பயிற்சி மாணவிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கொல்லம் கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாண்ட்ரா (17) மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை வைஷ்ணவி (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சாண்ட்ரா 12ஆம் வகுப்பு மாணவியாகவும், வைஷ்ணவி 10ஆம் வகுப்பு மாணவியாகவும் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில், காலைப் பயிற்சிக்கு வராத மாணவிகள் இருவரும் கதவைத் தட்டியும் பதிலளிக்காததால், விடுதி நிர்வாகிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
காவல்துறையின் விசாரணையில், வைஷ்ணவி வேறு அறையில் தங்கியிருந்தாலும், புதன்கிழமை இரவு சாண்ட்ராவின் அறைக்கு வந்து தங்கியுள்ளார். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; மேலும் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணை முடிவிலேயே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. விடுதியில் இருந்த பிற மாணவிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்படும். உடற்கூறு ஆய்வு அறிக்கைக்குப் பிறகு சடலங்கள் ஒப்படைக்கப்படும்.
இதேபோன்ற ஒரு சம்பவம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) ஆலப்புழா மையத்தில் நடந்துள்ளது. அங்கு நீர் விளையாட்டுப் பயிற்சி பெற்ற நான்கு பெண் விளையாட்டு வீரர்கள் விஷப் பழங்களை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
அந்தச் சம்பவத்தில், அபர்ணா என்ற வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனியர்கள் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அந்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். மேலும், அனைத்து வீராங்கனைகளாலும் கையெழுத்திடப்பட்ட தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறை கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.