டெல்லி: விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தற்போது விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மனுபாகர் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிலையில் அவருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லீரனை வீழ்த்தி தமிழக செஸ் வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமை குகேஷ்க்கு கிடைத்தது. இந்த நிலையில் குகேஷின் இந்த சாதனையை பாராட்டி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன் பிரித் சிங்குக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரித் சிங் பெற்றார்.இதேபோன்று பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற பிரவீன்குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
வரும் ஜனவரி 17ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதேபோன்று 32 வீரர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியதற்கான அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது. இதில் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட இருக்கிறது.
இதேபோன்று சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருது பாரா சூட்டிங் பயிற்சியாளரான சுபாஷ் ரானா,துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் வீரர் தீபாலி டேஷ் பாண்டே, ஹாக்கி பயிற்சியாளர் சந்திப் சங்வானுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பேட்மிண்டன் வீரர் முரளிதரனுக்கும், கால்பந்து வீரர் ஏர்மண்டோ ஏஞ்சல்க்கும் வழங்கப்பட இருக்கிறது. இம்முறை கிரிக்கெட் தொடர்பாக எந்த ஒரு வீராங்கனைகளும் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.