சென்னை : 6வது கேலோ இந்தியா விளையாட்டுத் தொடர் தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெற்று போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக இந்த கேலோ இந்தியா தொடர் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
18 வயது உட்பட்டவர்களுக்கான போட்டியை நடத்தி அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்த இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கடந்த 19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி முடிவில் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் மகாராஷ்டிரா 55 தங்கம், 48 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது.
சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெற்றதால் தமிழ்நாட்டு அணி இம்முறை சிறப்பாக செயல்பட்டு இருந்தது கடந்த முறை எட்டாவது இடத்தை பிடித்திருந்த தமிழக அணி இம்முறை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 38 தங்கம்,20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை தமிழ்நாடு அணி கைப்பற்றி இருக்கிறது. எப்போதுமே சிறப்பாக செயல்படும் ஹரியானா அணி இம்முறை மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 35 தங்கம் 22 வெள்ளி 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை ஹரியான கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த தொடரின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராதாக்கூர் கேலோ இந்தியா போட்டி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை விளையாட்டு துறை நோக்கி கொண்டு செல்ல ஊந்துகோளாக இருப்பதாக பாராட்டியுள்ளார். மேலும் தமிழ்நாடு இந்த தொடரை மிகவும் சிறப்பாக நடத்தி இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்.