லடாக்: லடாக்கின் லே நகரில் ஆறாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 20 அன்று கோலாகலமாகத் தொடங்கின. நவாங் டோர்ஜன் ஸ்டோப்டன் (NDS) மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகள், ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. இதில், பனிச்சறுக்கு மற்றும் ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டுகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். லடாக் இந்தப் போட்டிகளை நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.
பல வண்ணமயமான தொடக்க விழாவில் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் ராணுவ XI அணிக்கும் லடாக் யூனியன் பிரதேச அணிக்கும் இடையே நடைபெற்ற பனி ஹாக்கி கண்காட்சி போட்டி ஆகியவை இடம்பெற்றன. லடாக் துணை நிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா, கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐ அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். யூனியன் பிரதேச இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறையால் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, லடாக் யூனியன் பிரதேசத்தைப் பாராட்டியுள்ளார். "லடாக் யூனியன் பிரதேசம் மீண்டும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவின் குளிர்கால விளையாட்டு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. இமயமலையில் தொடங்கி நாடு முழுவதும் பரவுகிறது என்பதை நம்பிக்கையுடனும் திறமையுடனும் நிரூபித்ததற்கு நான் வாழ்த்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் லடாக் ஒரு முக்கிய அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
"கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2026, லே நகரில் பனி விளையாட்டுகளுடனும், அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் குல்மார்க்கில் பனி நிகழ்வுகளுடனும் இரு கட்டப் போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி, தொடர்ச்சி மற்றும் உயர்தர போட்டி அனுபவத்தை வழங்கும். சர்வதேச குளிர்கால விளையாட்டுத் தரங்களுக்கு இணையாக, மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் சூழ்நிலைகளில் தங்களை சோதித்துக்கொள்ள இந்த கட்டமைப்பு உதவுகிறது," என்றார். இது இந்தியாவின் குளிர்கால ஒலிம்பிக் பிரிவுகளில் போட்டித்தன்மையை உருவாக்க அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசியலடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா " பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. கேலோ இந்தியா மூலம், இளைஞர் மேம்பாடு, உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை தேசிய முன்னுரிமைகளாக உயர்த்தப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
"கடந்த மூன்று ஆண்டுகளாக கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது லடாக்கிற்கு பெருமை அளிக்கிறது. இது நிகழ்ச்சி லடாக்கின் திறன், உறுதிப்பாடு மற்றும் சிறப்பில் நாட்டின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. "லடாக் சமீபத்தில் தனது முதல் விளையாட்டு கொள்கையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பள்ளி மட்டத்தில் திறமையான வீரர்களை அடையாளம் காண்பது, பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது, லடாக் விளையாட்டு கவுன்சிலை வலுப்படுத்துவது, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகளில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, உறுதியான உதவித்தொகைகள், ₹100 கோடி வரையிலான ரொக்கப் பரிசுகள் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். என்றார்.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், சுமார் 480 விளையாட்டு வீரர்கள் உட்பட 1060 பேர் மூன்று இடங்களில் பங்கேற்கின்றனர். அவை புதுப்பிக்கப்பட்ட NDS மைதானம், குபூக்ஸ் குளம் மற்றும் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்டல் சென்டர் ரிங்க் ஆகிய இங்களில் நடக்கிறது. இதில், இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டுவரும் ஒலிம்பிக் விளையாட்டான ஃபிகர் ஸ்கேட்டிங் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த சில ஸ்கேட்டர்கள் இந்த போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்த தொடக்க விழாவில் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் கார்கிலின் தலைமை நிர்வாக கவுன்சிலர் டாக்டர் முகமது ஜாஃபர் ஆக்ஹூன், தலைமைச் செயலாளர் திரு. ஆஷிஷ் குந்தரா உட்பட யூனியன் பிரதேச நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.