டெல்லி: 2025 கோகோ உலகக் கோப்பை தொடரில் மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்து இருக்கிறது இந்திய அணி. உலகிலேயே முதன்முறையாக கோ கோ விளையாட்டுக்கு உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிகள் வெற்றி பெற்றன. முதலில் இந்திய மகளிர் அணி நேபாள நாட்டைச் சேர்ந்த மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் 78 - 40 என இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

அடுத்த சில மணி நேரங்களில் இந்திய ஆடவர் அணி 54 - 36 என்ற கணக்கில் நேபாள ஆடவர் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன் முறையாக நடத்தப்பட்ட கோ கோ உலகக் கோப்பைகளில் இந்திய அணி ஆடவர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு உலகக் கோப்பைகளையும் வென்று மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
இந்த உலகக்கோப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெற்ற இந்த கோ கோ உலகக் கோப்பையில் ஆடவர் பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன.
இந்த உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் கோ கோ அணிகளுடன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.