மும்பை: 3வது ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர் நடந்த முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பாலிவுட் நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண் கண்கவர் ஆட்டம், பாட்ட நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் 3வது தொடர் நேற்று மும்பையில் தொடங்கியது.
தொடக்க விழாவுக்குப் பின்னர் முதல் போட்டி நடந்தது. இதில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சந்தித்தன.
டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் கொல்கத்தாவை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து ஆடிய கொல்கத்தா நைட் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரரான மனோஜ் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அதேபோல கேப்டன் கங்குலியும் முட்டை எடுத்து வீழவே அதிர்ச்சியில் மூழ்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஹாட்ஜ் 13 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இருப்பினும் பின்னர் இணைந்த ஏஞ்சலா மாத்யூஸ் 65 ரன்களையும், ஓவைஸ் ஷா 58 ரன்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பின்னர் ஆடத் தொடங்கிய டெக்கான் சார்ஜர்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் கில்கிறைஸ்ட் 35 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். அவருடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய வி.வி.எஸ்.லட்சுமண் 22 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் சரிவர ஆடாததால், தோல்வியைத் தழுவ நேரிட்டது.
அபாரமாக ஆடிய மாத்யூஸ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று...
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் போட்டி மாலை 3 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறுகிறது. சச்சின், வார்னே தலைமையிலான மோதலைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இரவு 8 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.