டெல்லி: டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் டேவிட் வார்னர் அபார சதம் போட்டு டெல்லிக்கு வெற்றி தேடித் தந்தார். கொல்கத்தா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
வார்னர் மிக அபாரமாக ஆடி சதம் போட்டார். இந்த தொடரில் சதம் போட்ட 2வது வீரர் இவர் ஆகும். தொடக்கத்தில் 3 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இழந்து 38 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது டெல்லி. பின்னர் ரன் வேகத்தை கூட்டிய தொடக்க ஆட்டக்காரரான வார்னர் அபாரமாக ஆடி 69 பந்துகளில் 107 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவரும், பால் காலிங்வுட்டும் ணைந்து 128 ரன்களைச் சேர்த்தனர். காலிங்வுட் 53 ரன்களைக் குவித்தார். இவர் ஆடிய முதல் ஐபிஎல் போட்டியே இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடுமையான இலக்கை துரத்தத் தொடங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலிருந்தே விக்கெட்கள் விழுந்தபடி இருந்தன. கேப்டன் கங்குலி முதலில் வீழ்ந்தார். இவரது ரன் எண்ணிக்கை 5. பின்னர் மந்தீப் சிங், மனோஜ் திவாரி ஆகியோர் வெளியேறினர். கிறிஸ் கெய்ல் விழுந்ததும் கொல்கத்தாவிழ் தோல்வி உறுதியானது.
டேவிட் ஹஸ்ஸி மட்டும் சற்று போராடி 29 ரன்களை எடுத்தார். ஆஞ்சலா மாத்யூஸ் 24 ரன்களைச் சேர்த்தார்.