நாளைக்கு நல்ல புகைப்படம் எடுக்கலாம்... பொய்யாகிய கோப் பிரையண்ட்டின் உறுதி
கலிபோர்னியா : தான் இறப்பதற்கு முன்தினம் தன்னுடைய 13 வயது ரசிகர் ஒருவருக்கு மறுதினம் நல்ல புகைப்படத்தை எடுக்கலாம் என்று பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரையண்ட் உறுதி அளித்தது தெரியவந்துள்ளது.
என்பிஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர் இறப்பதற்கு முன்தினம் அவருடன் செல்பி எடுக்க விரும்பிய அவரது இளவயது ரசிகர் பிராடி ஸ்பிகீல் அவரிடம் கேட்க, தன்னுடைய மகளின் அணி தோல்வியுற்றதால் வருத்தத்தில் இருந்த பிரையண்ட், மறுதினம் நல்ல புகைப்படமாக எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த தினம் அவர் உயிருடன் இல்லை. ஆனால் பிரையண்ட் தன்னை கடந்து செல்லும்போது பிராடி புகைப்படம் எடுத்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
அமெரிக்காவை சேர்ந்த என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேரும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

5 முறை என்பிஏ சாம்பியன்
கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கிய கோப் பிரையண்ட், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டு முறை தங்கம் வென்றவர். மேலும் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணியில் 5 முறை என்பிஏ சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை புரிந்தவர். 20 ஆண்டுகள் கூடைப்பந்து வீரராக விளையாடியவர். இவரது அகால மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறுப்பு தெரிவித்த பிரையண்ட்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கோப் பிரையண்ட் மரணத்திற்கு முந்தைய நாளில் கோப் பிரையண்ட்டின் இளவயது ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். பிரையண்டிற்கு சொந்தமான மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தனது மகள் ஜியாவின் அணிக்கு பயிற்சி அளித்துவந்த பிரையண்ட் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

"நாளைக்கு நல்ல புகைப்படம் எடுக்கலாம்"
இதையடுத்து மீண்டும் பிராடி ஸ்பிகீல் என்ற அந்த 13 வயது சிறுவன் முயற்சிக்க, தன்னுடைய மகளின் அணி தோல்வியுற்றதால் வருத்தத்தில் இருந்த பிரையண்ட், மீண்டும் மறுத்துள்ளார். ஆயினும் இரண்டு ஆட்டங்கள் முடிந்து அவர் வெளியில் வரும்வரை காத்திருந்த அந்த சிறுவன் பிரையண்ட் தன்னை கடந்தபோது அவருடன் செல்பி எடுத்துள்ளான். இதைகண்ட பிரையண்ட் மறுநாள் நல்ல புகைப்படம் எடுக்கலாம் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் அவருடைய உறுதி பொய்யாகியுள்ளது.

நடந்ததை தெரிவித்த தாய்
இதையடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில் பிராடி பதிவிட்டுள்ளார். பிரையண்ட் உறுதி அளித்தபடி தன்னுடைய மகனுடன் செல்பி எடுக்காமலேயே அவர் மறுநாள் உயிரிழந்ததாக பிராடியின் தாய் டியோன் தெரிவித்துள்ளார். முதலில் இந்த செய்தி வெளிவந்தவுடன் அது உண்மையாக இருக்காது என்றே தான் கருதியதாகவும் ஆனால் அது உண்மையாக நிகழ்ந்துவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பிராடி எடுத்த இந்த செல்பியே பிரையண்டின் இறுதி புகைப்படமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications