
சாதனை தகர்ப்பு
பாகிஸ்தானுடனான தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று, இலங்கை வீரர் குமார் சங்ககாரா இரட்டை சதம் அடித்தார். அவர் 191வது ரன்னை எட்டியபோது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் ஒரு சாதனையை முறியடித்தார்.

190 ரன்களை கடப்பதில் சாதனை
அதாவது உலகிலேயே அதிகம் முறை 190 ரன்களுக்கும் மேல் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற பிராட்மேனின் சாதனையை சங்ககாரா முறியடித்து முதல் இடத்தை பிடித்தார். பிராட்மேன் 12 முறை 190 ரன்களை கடந்துள்ளார். சங்ககாரா 13வது முறையாக 190 ரன்களை கடந்துள்ளார்.

இரட்டை சதத்தில் 2வது இடம்
இந்த சாதனையை தொடர்ந்து தனது 10வது இரட்டை சதத்தை சங்ககாரா பூர்த்தி செய்தார். 12 டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்து பிராட்மேன் முதலிடத்திலுள்ள நிலையில், இரட்டை சதத்தின் அடிப்படையில் சங்ககாரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பிராட்மேன் 64 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது 12வது இரட்டை சதத்தை அடித்திருந்தார்.

மூன்றுமுறை தடை
பிராட்மேன் தனது கிரிக்கெட் வாழ்வில் 190 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தபோதெல்லாம், இரட்டை சதமும் அடித்துள்ளார். இதனால் அவர் 12 முறை இரட்டை சதங்களை விளாச முடிந்தது. ஆனால் சங்ககாரா 190 ரன்களை கடந்த பிறகு 3 முறை இரட்டை சதத்தை எட்ட முடியாமல் போனதால், இரட்டை சத சாதனையில் பிராட்மேனை முந்த முடியவில்லை.

அந்தோ பரிதாபம்
சங்ககாரா இருமுறை 192 ரன்களில் அவுட் ஆகிய நிலையில் ஒருமுறை 199 ரன்களை எடுத்திருந்த நிலையில் மறுமுனையில் அனைத்து விக்கெட்டுகளும் விழுந்ததால் அவரால் இரட்டை சதம் அடிக்க முடியாமல்போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











