டெல்லி: கிர்கிஸ்தான் இனக் கலவரத்தில் சிக்கித் தவித்து வரும் இந்திய மாணவர்களில் இதுவரை 77 மாணவர்களும், ஒரு பேராசிரியரும் பத்திரமாக மீட்கப்பட்டு தலைநகர் பிஷ்கெக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.முன்னாள் அதிபர் பாகியேவ் கடந்த ஏப்ரல் மாதம் கிர்கிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து தெற்கு கிர்கிஸ்தானில் அவரது ஆதரவாளர்களான கிர்கிஷ் இன மக்கள், மற்றொரு இனமான உஸ்பெக் இனத்தவருடன் மோதலில் ஈடுபட்டனர்.இதையடுத்து கிர்கிஸ்தான் முழுவதும் இந்தக் கலவரம் பரவி, உஸ்பெக் இனத்தவருக்கு எதிராக கிர்கிஸ் இன மக்கள் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். உஸ்பெக் மக்களை சரமாரியாக சுட்டுக் கொன்றும், தீயில் போட்டு எரித்தும், வீடுகள், வணிக நிறுவனங்களை தீவைத்துக் கொளுத்தியும் வருகின்றனர்.இந்த வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜலால்-அபாத், ஓஷ் ஆகிய முக்கிய நகரங்கள் வன்முறையின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் பலநகரங்களுக்கு வன்முறை பரவிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் ஓஷ் மற்றும் ஜலால்-அபாத் நகர்களில் மருத்துவப் படிப்பு படித்து வரும் இந்திய மாணவர்கள் கலவரத்தில் சிக்கிக் கொண்டு தங்களது அறைகளிலேயே முடங்க நேரிட்டது.உணவு, மின்சாரம், காஸ் சப்ளை என எதுவும் இல்லாததால் அவர்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். ஓஷ் நகரில், 99 மாணவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு வர்த்தகர் ஆகியோரும், ஜலால்-அபாத் நகரில் 15 இந்தியர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.இதையடுத்து அவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கையில் இறங்கியது. இதன் ஒரு கட்டமாக ஓஷ் நகரில் சிக்கியிருந்தவர்களில் ஒரு பேராசிரியர் மற்றும் 77 மாணவர்களை கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்ட இந்திய அதிகாரிகள் அவர்களை தலைநகர் பிஷ்கெக் கொண்டு சென்றுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவிக்கையில், கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாத வகையில் மீட்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய தூதரகத்தால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். அங்கு தற்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. எனவே கிர்கிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு முடிந்தவரை இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.1 லட்சம் மக்கள் ஓட்டம்:இதற்கிடையே கிர்கிஸ்தானில் இருந்து உயிருக்குப் பயந்து 1 லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர்.கலவரத்தை அடக்கும் பணியில் கிர்கிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அவர்களால் கலவரத்தை அடக்க முடியவில்லை. எனவே ரஷ்யாவிடம் ராணுவ உதவி கேட்டது, கிர்கிஸ்தானின் இடைக்கால அரசு ஆனால் ராணுவத்தை அனுப்ப முடியாது என ரஷ்யா மறுத்துவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் உணவு, உடை வேண்டுமானால் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ரஷியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை போன்றவை விமானம் மூலம் உணவு பொட்டலங்களை வினியோகித்து வருகின்றன. உஸ்பெக் மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற உஸ்பெகிஸ்தானுக்கு தப்பி ஓடுகின்றனர். உஸ்பெகிஸ்தானின் எல்லையில் உள்ள ஜலாலாபாத் வழியாக செல்கின்றனர். எனவே உஸ்பெகிஸ்தானில் அகதிகள் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கு அகதிகளாக தங்கியுள்ளனர். இன்னும் 80,000 பேர் அங்கு செல்வதற்காக எல்லையில் காத்திருக்கின்றனர். இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இவர்களை கலவரத்தில் ஈடுபடுத்த பாகியேவ் ஆதரவாளர்கள் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். #13;