ஆசிய தடகளப் போட்டிக்கு தமிழக வீரர் லட்சுமணன் தேர்வு
டெல்லி: தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீரர் கோவிந்தன் லட்சுமணன், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் ஆசிய இண்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இந்தோனேஷியாவின் ஜகeர்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது ஆசிய இண்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், ஈரான் தலைநகர் தெஹ்ரானில், பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

36 பேர் கொண்ட குழு
அதைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், பிப். 11 முதல் 14 வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு டெஸ்ட் போட்டிக்கான, 36 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டது. ஜகார்த்தாவில், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கு முன் இந்தப் போட்டி நடக்க உள்ளது.

ஆசிய விளையாட்டுக்கு தேர்வு
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு புவனேஸ்வரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், 5000 மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்று அசத்தினார் லட்சுமணன்.

ஏழ்மையிலும் விடாமுயற்சி
ஏழை குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். தாய் கூலி வேலை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், முன்னாள் தேசிய தடகள வீரரான லோகநாதனின் கவிநாடு ஸ்போர்ட்ஸ் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஷூ வாங்க காசில்லாததால், வெறும் காலிலேயே ஓடி பயிற்சி பெற்றார்.

உலக சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றார்
2015ல் சீனாவின் வுஹானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். கடந்தாண்டு லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். தற்போது ஆசிய போட்டிகள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications