உலக கோப்பையில் இருந்து கழுத்தைபிடித்து வெளியே தள்ளப்பட உள்ள 'கடி மன்னன்' சுவாரஸ்
ரியோடி ஜெனிரோ: இத்தாலிக்கு எதிரான லீக் போட்டியில் உருகுவேயின் சுவாரஸ் மீண்டும் தன் கை(பல்)வரிசையை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு 2 ஆண்டுகள் வரையில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியில், நேற்றுமுன்தினம் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. இதில் உருகுவே 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆக்ரோஷம்
கோல் அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக, இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, உயரமாக வந்த பந்தை தலையால் முட்டி தள்ளுவதற்காக சுவாரசும், இத்தாலியின் ஜியார்ஜியோ செய்லினியும் குதித்தனர்.

நறுக் கடி
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுவாரஸ், செய்லினியின் தோளில் பலமாக கடித்தார். வலியால் துடித்த செய்லினிக்கு தோளில் காயம் ஏற்பட்டது.
இதை நடுவர் ரோட்ரிகஸ்சிடம் காட்டியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தலையிட்ட பிபா
இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கையில் எடுத்துள்ளது. பிபா ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

2 ஆண்டு தடை?
சுவாரஸ் கடித்தது நிரூபணமாகும் பட்சத்தில் அவருக்கு 24 போட்டியில் விளையாட தடை அல்லது 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக உலக கோப்பை போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்படுவார். இதனால் அச்சத்திலுள்ளார் சுவாரஸ்.

கடி ஒரு தொடர் கதை..
இதற்கு முன், கடந்தாண்டு பிரீமியர் லீக் போட்டியில் லிவர்ஃபூல் அணிக்காக விளையாடிய சுவாரஸ், செல்சியாவின் இவானோவிக்கின் கையில் கடித்தார். இதற்காக 10 போட்டியில் விளையாட தடை பெற்றார்.

பல தடைகளை தாண்டியவர்..
2010ல் அஜாக்ஸ் அணி கேப்டனாக இருந்த போது, பிஎஸ்வி என்தோவென்ஸ் அணியின் பக்கலின், தோளை கடித்து வைத்தார். இதற்காக 7 போட்டியில் தடை பெற்றார். 2011ல் மான்செஸ்டர் அணியின் பாட்ரைஸ் எர்ராவை கடித்ததற்காக 8 போட்டியில் தடை மற்றும் 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications