மோன்டிவிடியோ: உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் இத்தாலி வீரரை கடித்து குதறியதால் தடை விதிக்கப்பட்ட உருகுவே வீரர் லூயிஸ் சுவாராஸுக்கு அவரது பாட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இத்தாலியுடனான போட்டியின் போது அந்நாட்டு வீரரை உருகுவே அணியின் லூயிஸ் சுவாராஸ் கடித்து குதறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் 4 மாத காலம் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் இன்று உருகுவே திரும்பினார். ஆனால் உருகுவே நாட்டில் அதிபரே விமான நிலையத்துக்கு வந்து சுவாராஸை வரவேற்ற கையோடு அவரது செயல்பாட்டை நியாயப்படுத்தியும் பேசினார்.
அதேபோல் லூயிஸ் சுவாராசின் பாட்டி லிலா பிரிஸ் டி ரோசாவும் ஆதரவு தெரிவித்து பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், லூயிஸ் எப்படி விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். அதையேதான் அவர்கள் செய்துள்ளனர்.
நாயை தட்டிக் கொடுத்துவிட்டு விரட்டியடிப்பது போல செய்துள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றார். உருகுவே அணியானது ரவுண்ட் 16வது சுற்றில் கொலம்பியாவை நாளை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.