மதுரை : சிலம்பம் விளையாட்டில் சர்வதேச அளவில் தங்கம் வென்ற மதுரை விராட்டிப்பத்தை சேர்ந்த 10 வயதே ஆன மாணவன் அதீஸ் ராமுக்கு சர்வதேச அளவில் சிறந்து விளங்கியதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நேஷனல் ஸ்போர்ட்ஸ் & பிஸிகல் ஃபிட்னஸ் போர்டு (National Sports & Physical Fitness Board) என்ற அமைப்பு வருடாவருடம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட நேஷனல் ஸ்போர்ட்ஸ் & பிஸிகல் ஃபிட்னஸ் போர்டு அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
இந்தாண்டிற்கான "இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் அவார்ட்" (International Sports Star Award)-ஐ மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த மாணவன் அதீஸ்ராம் வென்றுள்ளார்.
என்னய்யா பாவம் பண்ணாரு.. 11 வருடம் காத்திருப்பு.. பாக். கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!
கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 14-15 தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடம் பெற்றார். அப்போது தங்கப் பதக்கம் வென்றதற்காக இந்த சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதீஸ்ராம் சிலம்பம் கற்றுவருகிறார். இவர் செக்கானூரணி கேரன் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பல்வேறு மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட, மாநில அளவில் அறுபதிற்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை குவித்துள்ளார்
2018ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய போட்டியில் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெறும் சிலம்பம் மட்டுமில்லாமல், அதிலேயே ஸ்கேட்டிங் ஓட்டிக்கொண்டு வேகமாக சிலம்பம் சுற்றும் திறமையையும் கொண்டுள்ளார். அதோடு களரி, கட்டைக்கால், வில்வித்தை போன்றவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார்.