மும்பை: ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்தது தவறு எனக் கூறி உலகின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரரான மேக்னஸ் கார்ல்சன் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரம் செஸ் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
2025 உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் இடம் பெற்று இருந்தார். அவர் ஒன்பதாவது சுற்றில் ஆடுவதற்கு தொடர் நடந்த அரங்கிற்கு வந்தார்.

அப்போது மேக்னஸ் விதிமுறைக்கு மாறாக உடை அணிந்து வந்ததாக புகார் எழுந்தது. செஸ் விளையாட்டை உலக அளவில் கட்டுப்படுத்தி வரும் ஃபிடே அமைப்பு சமீபத்தில் வெளியிட்டு இருந்த அறிக்கை ஒன்றில் செஸ் தொடரில் விளையாட வரும் வீரர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.
அந்த விதிமுறைகளில் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்ற விதியும் இடம் பெற்று இருந்தது. ஆனால், போட்டி அரங்கிற்குள் மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்தார். அவரை தடுத்து நிறுத்திய ஃபிடே அதிகாரிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது தவறு என சுட்டிக்காட்டி 200 டாலர் அபராதம் விதித்தனர்.
மேலும், அவர் தனது பேன்டை மாற்றிக் கொண்டு வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் எனவும் அறிவுறுத்தினர். ஆனால். மேக்னஸ் கார்ல்சன் தான் நாளை வேறு பேன்ட் அணிந்து வருவதாக கூறி இருக்கிறார். அதற்கு அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. மேக்னஸ் உடையை மாற்ற முடியாது என திட்டவட்டமாக இருந்தார்.
இதை அடுத்து ஒன்பதாவது சுற்று போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர் உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பற்றி பேசிய மேக்னஸ் கார்ல்சன் தான் ஃபிடே-வின் விதிமுறைகளால் சோர்ந்து போய்விட்டதாகவும், இனியும் இதை தான் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும், இது மிகவும் முட்டாள்தனமான கொள்கை எனவும் கூறினார்.