பெகு: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டை பிரேக்கர் சுற்றில் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி கார்ல்சன் வெற்றிபெற்றுள்ளார்.
செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் டை பிரேக்கர் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரர் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். 18 வயதேயான தமிழக வீரர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார். இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்று மற்றும் இராண்டாவது சுற்று டிராவில் முடிவடைந்தது.

இதையடுத்து இன்று டை பிரேக்கர் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் கறுப்பு நிற காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். இதில் டை பிரேக்கர் சுற்றின் ரவுண்ட் 1 போட்டிக்கு ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.
அந்த வகையில் தமிழக வீரர் பிராக்ஞானந்தா தொடக்கம் முதலே நிதானமாக ஆடினார். 14 நகர்வுகள் முடிவில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் இருவரும் தங்களின் மந்திரியை இழந்தனர். இதன்பின் இதன்பின் அடுத்த 4 நகர்வுகளில் இருவரும் தங்களின் ராணிகளை இழக்க ஆட்டம் விறுவிறுப்பானது. தொடர்ந்து 21 நகர்வுகளுக்கு பின் மேக்னஸ் கார்ல்சனுக்கு முன்னிலை ஏற்பட, பிரக்ஞானந்தா நிதானமாக ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதனால் டை பிரேக்கரின் முதல் ரவுண்ட் முதல் சுற்று ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. கிட்டத்தட்ட 32 நகர்வுகளுக்கு பின்னரும் ஆட்டம் யாருக்கும் சாதகமாக திரும்பவில்லை. பின்னர் 34வது நகரின் முடிவில் இருவரும் தங்களின் யானைகளை பறிகொடுத்தனர். 40 நகர்வுக்கும் மேலாக ஆட்டம் யாரின் பக்கமும் சாயவில்லை. ஆனால் கார்ல்சனின் அதிரடியான நகர்வுகளால், பிரக்ஞானந்தா திணறினர். அடுத்த நகர்வை மேற்கொள்ள பிரக்ஞானந்தா அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.
இதனால் பதற்றமடைந்த பிரக்ஞானந்தா தவறுகளை செய்ய, இறுதியாக மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் போட்டியை வென்றார். இதனால் பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த டை பிரேக்கர் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் ஆடும் பிரக்ஞானந்தா, கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.