
2012 ஒலிம்பிக்கில் வெண்கலம்
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கடந்த 2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்று குத்துச்சண்டையில் முதல்முறையாக இந்தியாவிற்கு வெண்கல பதக்கத்தை பெற்றுத் தந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.

வேறு வண்ண பதக்கம்
இந்நிலையில் பேஸ்புக் பக்கத்தில் பேசிய மேரிகோம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடத்தப்படவுள்ள ஒலிம்பிக் போட்டியில் வேறு வண்ண கோப்பையை வெல்வதுதான் தன்னுடைய தற்போதைய ஒரே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். தான் போட்டியில் ஈடுபடும்போது ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்றும் அதை மனதில் வைத்து தான் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தூங்காமல் கழித்த இரவுகள்
தன்னுடைய பலவீனங்களை பலமாக மாற்றுவது குறித்து தொடர்ந்து யோசிப்பேன் எனவும், அதற்காக பல இரவுகள் தூங்காமல் கழித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தன்னுடைய போட்டிகளில் பல வீராங்கனைகள் வந்து போவதாகவும், ஆனால் தான் தன்னுடைய பலம், வலிமை, வேகம் மற்றும் சகிப்புத்தன்மை இவற்றை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெண்கலம் வென்ற மேரி கோம்
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றுள்ள மேரி கோம், அப்போது முதல்முறையாக 48 கிலோ பிரிவில் இருந்து 51 கிலோ எடைப்பிரிவிற்கு மாறினார். இந்த பிரிவில் இந்தியாவில் வீராங்கனைகள் இல்லாததால், அந்த எடைப்பிரிவில் வலிமையான மற்றும் உயரமான ஆண் குத்துச்சண்டை வீரர்களுடன் தான் பயிற்சி எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications