கோலாலம்பூர்: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளையொட்டி சூதாட்டம் நடத்திய 31 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது அதன் முடிவை யூகித்து சூதாட்டம் நடப்பது இந்தியாவில் வழக்கம். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இதை வைத்தும் உலகமெங்கும் சூதாட்டம் சூடிபிடித்துள்ளது. மலேசியாவிலும் இதுபோன்ற ஒரு சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார், மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகோர் பகுதியின் பல இடங்களில் சோதனைகள் நடத்தினர். அதில் சூதாட்டம் நடைபெறுவது உண்மைதான் என்பது தெரியவந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், மலேசிய பணமான 61 ஆயிரத்து 215 ரிங்கிட் மற்றும் 5650 சிங்கப்பூர் டாலர்களை பறிமுதல் செய்தனர். உலக கோப்பை முடிவடையும்வரையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.