ஜகார்த்தா : மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் சிவசங்கரி ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார். மகளிர் ஸ்குவாஷ் பிரிவு இறுதியில் மோதிய இருவருமே மலேசியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஸ்குவாஷ் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் அரையிறுதியில் மலேசியாவின் சிவசங்கரி மற்றும் நிக்கோல் டேவிட்டிடம் தோல்வி அடைந்தனர்.
இதனால், மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதியில் தமிழ் வம்சாவளி பெண்ணான சிவசங்கரி, நிக்கோல் டேவிட் மோதினர். அதில் நிக்கோல் டேவிட் வெற்றி பெற்றார். சிவசங்கரி வெள்ளி வென்றார்.
பத்தொன்பது வயதேயான சிவசங்கரி இப்போது தான் உலக ஸ்குவாஷ் அரங்கிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து வருகிறார். தன் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலேயே இறுதி வரை முன்னேறி அசத்தியுள்ளார் அவர்.
மேலும், மலேசியாவின் நிக்கோல் டேவிட் உலகின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார். அவர் நேற்று தன் 35வது பிறந்த நாள் அன்று ஐந்தாவது ஆசிய போட்டி தங்கம் வென்று சாதித்தார். அவருடன் இறுதிப் போட்டியில் ஆடுவது என்பது என் கனவு என தெரிவித்தார் சிவசங்கரி.