கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை.. வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை அடுத்தடுத்து வென்று கொடுத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெயர் கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து அவரது பெயர் விருதுப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். அவர் இரண்டு வெண்கல பதக்கங்களை துப்பாக்கி சுடுதல் பிரிவில் வென்று இருந்தார்.

முதலில் மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அடுத்து கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்று இருந்தார். 22 வயதான அவர் இதன் மூலம் இந்திய அணிக்காக ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 12 பேர் கொண்ட விருது பட்டியலுக்கான தேர்வு குழுவினர் மனு பாக்கரின் பெயரை பட்டியலில் சேர்க்காதது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
மனு பாக்கரின் பெயர் சேர்க்கப்படாத நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மனப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமார் ஆகியோரது பெயர்கள் கேல் ரத்னா விருது பட்டியலில் இடம் பெற்று இருந்தது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், அந்த வழக்கத்தை மீறுவதைப் போல மனு பாக்கரின் பெயர் விருதுப் பட்டியலில் இடம் பெறவில்லை.
அது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் விசாரித்த போது மனு பாக்கர் விருதுக்காக விண்ணப்பிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், மனு பாக்கரின் தந்தை ஆன்லைனில் இணையத்தின் மூலம் மனு பாக்கர் விருதுக்கான விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறி இருந்தார். இந்த குழப்பங்களுக்கு இடையே மனு பாக்கரின் பெயரை கேல் ரத்னா விருதுப் பட்டியலில் சேர்க்குமாறு இந்திய தேசிய ரைப்பிள் அமைப்பு விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது.
அதை விளையாட்டு துறை அமைச்சகம் ஏற்கும் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து மனு பாக்கருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே மனு பாக்கர் இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications