பதக்கம், பெருமை, பாராட்டு... கூடவே சாக்ஷிக்கு குவியும் “பணப் பரிசுகள்”!
டெல்லி: ரியோ ஓலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த சாக்ஷிக்கு பாராட்டுகளைப் போலவே, பரிசுத் தொகையும் குவிந்து வருகிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டிப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மல்யுத்தப் பிரிவில் இந்தியாவிற்கு 5வது பதக்கத்தை வாங்கித் தந்தவர் என்ற பெருமையையும் சாக்ஷி பெற்றுள்ளார்.
இது மட்டுமின்றி, ஒலிம்பிக் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் சாக்ஷி பெற்றுள்ளார்.

பரிசுத் தொகை...
பதக்கம் வென்ற சாக்ஷிக்கு பிரதமர் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாராட்டுகளைப் போலவே சாக்ஷிக்கு பரிசுத் தொகையும் குவிந்து வருகிறது.

ஹரியானா அரசு...
ஹரியானாவைச் சேர்ந்த சாக்ஷியின் வரலாற்றுச் சாதனையை கவுரவிக்கும் விதமாக அம்மாநில அரசு, ரூ. 2 கோடி பரிசும், நிலமும் கூடவே அரசு வேலையும் வழங்கியுள்ளது.

இந்திய ரயில்வே...
இதேபோல் இந்திய ரயில்வேயும் தனது ஊழியரான சாக்ஷியின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது. இது தவிர இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 20 லட்சமும், ஜே.எஸ்.ஹெச் குரூப் ரூ 15 லட்சமும் சாக்ஷிக்கு பரிசாக அளித்துள்ளது.

சல்மான்கான்...
இது மட்டுமின்றி பாலிவுட் நடிகர் சல்மான்கான், ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே, அதன்படி சாக்ஷிக்கும் ரூ. ஒரு லட்சம் கிடைக்கவுள்ளது.

வரலாற்றில் இடம்...
இவை எல்லாவற்றிற்கும் மேல் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவு கனவாகவே போய் விடுமோ என்ற இந்தியர்களின் கவலையைத் தீர்த்து, வெண்கலப் பதக்கம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் சாக்ஷி. இந்தப் பெருமை இனி வரும் காலங்களில் அவர் மென்மேலும் சாதனை புரிய தூண்டுகோலாக உடன் வரும் என்பது மறுக்க முடியாதது.


Click it and Unblock the Notifications