டெல்லி: நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

இதேபோல பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார். சுனிதி சாலமன் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.