ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மின்டனில் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டாலும் எதிர்த்து போட்டியிட்ட கரோலினா மரினை, முதல் கேமில் மண்ணை கவ்வ செய்து சாதித்தார் பி.வி.சிந்து. நடப்பு ஒலிம்பிக்கில் மரின் பெற்ற முதல் கேம் தோல்வி இதுதான் என்பது சிறப்பு.
உலக பேட்மின்டன் தர வரிசையில் நம்பர்-1 வீராங்கனையான கரோலினா மரின், இந்த ஒலிம்பிக் தொடரில் ஆக்ரோஷம் காட்டி அனைத்து போட்டியாளர்களையும் அடித்து நொறுக்கி, பைனலுக்குள் நுழைந்தார்.

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கின் நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவின் ஜுருய் லீ-யை 21-14 மற்றும் 21-16 என்ற நேர் செட்களில் எளிதாக ஊதி தள்ளியவர்தான் இந்த மரின்.
ஒலிம்பிக் பேட்மின்டன் ஆட்டங்களில் எப்போதுமே சீனாவின் ஆதிக்கம்தான் இருக்கும். அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட சீன வீராங்கனையிடம் கூட ஒரு கேமையும் தோற்காமல் நேர் செட்களில் வீழ்த்தி பைனலுக்கு வந்தவர்தான் மரின்.
ஆனால், தர வரிசையில் 10வது இடத்தில் இருந்தாலும்கூட, இந்தியாவின் பி.வி.சிந்து ஆக்ரோஷத்தின் முன்னால் மரின் அடி பணியத்தான் வேண்டியதாயிற்று. ஆம், ஆட்டத்தின் முதல் கேமை, 21-19 என்ற கணக்கில் வென்று, மரின் கண்ணில் மரண பயத்தை காட்டினார் சிந்து.
இந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக ஒரு கேமை இழந்தார் மரின். அதுவும், முக்கியமான இறுதி போட்டியில். சோர்வு, அவமானம் என பல கலவையாக காட்சியளித்தது மரின் முகம். இதன்பிறகு வெறி கொண்டு ஆடினார் மரின்.
இறுதியில், 21-19, 12-21, 15-21 என்ற செட்களில் மரின் வென்று தங்க பதக்கம் வென்றார். ஆனால், முதல் செட்டை அவர் தோற்றதை அடுத்த ஒலிம்பிக் வரை அவரால் மறக்கவே முடியாது என்பது மட்டும் உண்மை.