துபாய்: துபாய் ஈமான் அமைப்பு சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கென சிறப்பு வாலிபால் போட்டியினை 16.05.2014 அன்று காலை சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் சிறப்புற நடத்தியது.
வாலிபால் போட்டிக்கு ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமை வகித்தார். துவக்கமாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் மொய்தீன் இறைவசனங்களை ஓதினார்.
மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாலிபால் போட்டிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கன்சுலேட்டின் துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு துவக்கி வைத்தார். அவர் தனது வாழ்த்துரையில், ஈமான் அமைப்பு ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பொதுமக்களின் நன்மைக்காக நடத்தி வருகிறது. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் பொதுமக்கள் உடல் நலத்துடன் திகழ்வதுடன் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தேவையிருக்காது எனக் குறிப்பிட்டார்.
பிரவாஸி சம்மன் விருது, சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சமூக சேவகர் கே. குமார் ஈமான் அமைப்பின் பணிகளைப் பாராட்டினார்.
அரேபியா ஹோல்டிங்ஸ் எக்சிகியூட்டிவ் டைரக்டர் சலீம் அன்சாரி ஈமான் அமைப்பு தொழிலாளர்களுக்கு பிரத்யேகமாக நடத்தி வரும் போட்டிகள் சிறப்புற வாழ்த்தினார். இதுபோன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கு தமது நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
எட்டு அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டியில் இறுதிப் போட்டியில் ஈடிஏ எம்.என்.இ. அணி ஈடிஏ ஹெச்.ஆர்.எம். அணியினை தோற்கடித்து வெற்றிக் கோப்பையினைப் பெற்றது.
வெற்றிக் கோப்பையினை ஈடிஏ எம்.என்.இ. அணிக்கு கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டி லைசென்சிங் அத்தாரிட்டி தலைவர் பழனி பாபு வழங்கினார். இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கது என்றார்.
அரேபியா ஹோல்டிங்ஸ் எக்சிகியூட்டிவ் டைரக்டர்கள் அப்துல் ரவூஃப் மற்றும் சலீம் அன்சாரி ஆகியோர் ரன்னர்ஸ் அணியான ஈடிஏ ஹெச்.ஆர்.எம். அணியினருக்கு பரிசுக் கோப்பையினை வழங்கினர்.
நிகழ்வுகளை சிறப்புற ஒருங்கிணைத்த ஈடிஏ நலத்துறையின் அஹமது சுலைமான், அஸ்கான் கேம்பின் கபீர், பிரபு உள்ளிட்ட குழுவினர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாக்குழு செயலாளர் கீழை ஏ ஹமீது யாசின் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை முஹைதீன் தலைமையிலான குழுவில் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், சாதிக், ஜமால் முஹைதீன், காயல் ஈஸா, யாக்கூப், ஃபைஜுர் ரஹ்மான், தமீம் அன்சாரி, அப்துல்லா உள்ளிட்டோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தனர்.
ஈடிஏ அஸ்கான், அரேபியா ஹோல்டிங்ஸ், சூப்பர் சோனிக் நிறுவனம், அல் ரவாபி, தோசா பிளாசா, ஆம்பூர் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வாலிபால் போட்டி சிறப்புற நடைபெற அணுசரனை வழங்கியிருந்தன.