ரியோடி ஜெனிரோ: கடும் இழுபறிக்கு பிறகு, நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு நடுவே மெக்சிகோ அணி கேமரூனை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிிருந்த மெக்சிகோவும், கேமரூனும் மோதின. இரு அணிகளுமே கோல்போட முடியாமல் முதல் பாதி ஆட்டத்தை தடுப்பாட்டத்திலேயே செலவிட்டன.

இரண்டாவது பாதியின்போது மெக்சிகோவின் ஓரிப் பெரால்டா கோல் போட்டு இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கேமரூன் அணியால், ஒரு கோலும் போடமுடியவில்லை. இறுதியில் கேமரூனை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் மெக்சிக்கோ எளிதாக வீழ்த்தியது.
முன்னதாக முதல் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் ஜியோவனிடோஸ் போட்ட இரு கோல்களை விதிமுறைகளை காரணம் காண்பித்து, ஏற்க நடுவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் தொலைக்காட்சி ரிப்ளேயில் விதிமுறைகளின்படிதான் கோல் போடப்பட்டது தெரிந்தது. இதைப்பார்த்த மெக்சிகோ பயிற்சியாளர் மிக்குவேல் ஹெரேரா, நடுவர்களில் ஒருவரான வில்மர் அலெக்சாண்டருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். நடுவர்களின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.