மறுபடியும் நீச்சல் குளத்தைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்.. இது பெல்ப்ஸ் சபதம்
பெங்களூரு: நீ்ச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அது இறுதியானது. அதைத் திரும்பப் பெறும் யோசனை என்னிடம் இல்லை என்று நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க நீ்ச்சல் சாம்பியன் பெல்ப்ஸ் படைக்காத உலக சாதனையே இல்லை. குறிப்பாக ஒலி்ம்பிக்கில் அவர் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒலிம்பிக்கில் அவர் இதுவரை 23 தங்கம் உள்பட 28 பதக்கங்களை அள்ளி புதிய வரலாறு படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் அவர் 5 தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் பெல்ப்ஸ்.

15 வயது முதல்
2002ம் ஆண்டு தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் பங்கேற்றபோது அவருக்கு வயது 15தான். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இளம் வயது அமெரிக்கர் என்ற சாதனையும் பெல்ப்ஸிடம் உண்டு.

அடுத்தடுத்து சாதனைகள்
அன்று முதல் தொடர்ந்து சாதனை படைப்பது மட்டுமே பெல்ப்ஸின் வேலையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அவர் முத்திரை பதித்து வருகிறார்.

2012ல் திடீர் ஓய்வு
2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது திடீரென அவர் ஓய்வை அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரியோவிலும் அவர் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று தனது ஓய்வை கைவிட்ட பெல்ப்ஸ் ரியோவில் பங்கேற்றார். புதிய வரலாறும் படைத்தார்.

மீண்டும் ஓய்வு
ஆனால் தற்போது மீண்டும் ஓய்வை அறிவித்துள்ளார் பெல்ப்ஸ். ஆனால் இந்த முறை தனது முடிவைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார். தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

போதும் போதும் போதும்
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போதும் போதும் போதும். போதிய அளவு சாதித்து விட்டேன். இப்போது நான் உறுதியான முடிவை எடுத்துள்ளேன். அதில் மாற்றம் இருக்காது. நான் விரும்பியபடி எனது முடிவு இருக்கிறது. இது மகிழ்ச்சியே.

இதுதான் கடைசி ஒலிம்பிக்
இதுதான் எனது கடைசி ஒலிம்பிக். லண்டனை விட இங்கு நான் அதிகம் கவனிக்கப்பட்டேன். எனது முகம் அதிகம் வெளியில் காட்டப்பட்டது. மகிழ்ச்சி தருகிறது. விரும்பியபடி எனது ஓய்வு அமைகிறது என்றார் அவர்.

குட்டிப் பையனுடன்
பெல்ப்ஸுக்கு சமீபத்தில்தான் மகன் பிறந்தான். பெல்ப்ஸின் மனைவி தாயார் ஆகியோரும் ரியோ வந்திருந்து பெல்ப்ஸின் கடைசிப் போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications