பளுதூக்குதலில் அசத்திய மீராபாய் சானு.. காமன்வெல்த்-ல் இந்தியாவுக்கு முதல் தங்கம்.. குவியும் பாராட்டு
பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று இந்தியா எந்தவொரு பதக்கமும் வெல்லாத சூழலில் இன்று இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

பளுதூக்குதல் போட்டி
இன்று மதியம் நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சான்கெட் மகாதேவ் சர்கார் 59கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற மற்றொரு போட்டியில் 61 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

மீராபாய் சானு அசத்தல்
இந்நிலையில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சானு இன்று 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். இதில் ஸ்னாட்ச் பிரிவில் தனது முதல் வாய்ப்பில் 84 கிலோ தூக்கிய அவர், 2வது வாய்ப்பில் 88 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இதன் மூலம் தேசிய அளவிலான சாதனையை படைத்தார்.

3வது வாய்ப்பில் சொதப்பல்
3வது வாய்ப்பில் 90 கிலோவை தூக்க முயன்று தோல்வியை சந்தித்தார். எனினும் முன்பு தூக்கிய 88 கிலோ எடையே அடுத்த சுற்றுக்கு போதுமானதாக இருந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும் தங்கப்பதக்க வாய்ப்பும் அவரின் கையை விட்டு செல்லாமல் இருந்தது.

முதல் தங்கப்பதக்கம்
இதன்பின்னர் நடைபெற்ற க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் மீராபாய் சானு தனது முதல் வாய்ப்பிலேயே 109 கிலோ எடையை தூக்கி அசத்தினார். காமன்வெல்த் போட்டிகளில் அதிகபட்ச எடையை தூக்கி சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தாண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் இது இவரின் மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications